செவ்வாய், 13 டிசம்பர், 2011

வெளிச்சம்


Wednesday, December 14, 2011

வெளிச்சம்


அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய
அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி
வெளியே தென்படாதது

எங்கு, எப்பகுதியலது
தேடினாலும் தென்படாதது

அலங்காரங்களற்ற விழிகளில்
இருளை விடவும் அனேகமானவை
வெளிச்சத்தில் மறைந்துபோகும்
தென்படாமலேயே

- இஸுரு சாமர சோமவீர
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை



நன்றி
# நவீன நிருட்சம்
# வார்ப்பு
# திண்ணை

Monday, December 5, 2011

எமதுலகில் சூரியனும் இல்லை

 
இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும்
பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும்
இறப்பர் விலை அதிகரித்த போதும்
நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென
உணர்கிறது இதயம் எப்போதும்

அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில்
பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே
இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால்
இரு பாதங்களையும் வைத்தபடி
மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து
நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி

தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின்
உரிமை எமக்கில்லை பிள்ளையே
ஊருமற்று நாடுமற்று
லயன் தான் வாழ்க்கையே

கிணற்றுத் தவளைகள் போல
லயத்திலிருக்கும் நம் எல்லோருக்கும்
உரிமையில்லை எதற்கும்
இது பற்றிக் கதைக்கவும் கூட

- ஹெரல்ட் மெக்ஸிமஸ் ரொட்ரிகோபுள்ளே
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், 
இலங்கை

நன்றி
# உயிர்மை
# திண்ணை

Friday, November 4, 2011

விவாகரத்தின் பின்னர்

உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது
வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண்
அவளது இரு புறமும்
சிறு குழந்தைகளிரண்டு

கீழே
முற்புதர்கள் கற்சிதறல்கள்
நாகம், விரியன், மலைப்பாம்புகள் நிறைந்திருக்கும்
பாதாளம்
அகன்ற வாயைத் திறந்துகொண்டு

அவளது தலைக்கு மேலே
இரவின் கனத்த இருட்டு
ஊளையிடும்
மழையும் கோடை இடியும்
வெற்றியுடன் ஒன்றிணைந்து

ஏற்றி விட்டவர் எவரோ
இவளை
இந்த மா மலை மீது

மெதுவாகக் காலடியெடுத்து வைத்தபடி
கீழ் விழிகளால் இருபுறமும் பார்த்தபடி
அவளைக் கைவிட்டு அவர்களெல்லோரும் சென்றுவிட்டாலும்

கீழே மரக் கிளையொன்றில்
மறையக் காத்திருக்கும் சூரிய ஒளியில்
பிசாசொன்றைப் போல காற்றுக்கு அசையும்
இற்றுப் போன புடைவைத் துண்டொன்று

சீராக முட்புதர்களை வெட்டியகற்றி
பாதையொன்றை அமைத்தபடி
இந்தக் கொடுமையிலிருந்து தப்பித்து
நாளைக் காலையில்
அவள் வருவாளா ஊரொன்றுக்கு

நாளைய சூரியன் உதிக்கும் வேளை
இருக்குமோ
அவளது ஆடையும்
மரத்தின் கிளையொன்றில் சிக்கியபடி

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
#  மறுபாதி - கவிதைகளுக்கான இதழ் - 06 , வைகாசி-ஆவணி 2011
# ஊடறு
# திண்ணை 

Wednesday, June 8, 2011

அம்மாவின் நடிகைத் தோழி


அம்மா சொல்வாள்
அந் நடிகையின் நடிப்பைப்
பார்க்க நேரும் போதெல்லாம்

'பள்ளிக்கூடக் காலத்தில்
உயிர்த் தோழிகள் நாம்
அமர்ந்திருந்தோம் ஒரே வகுப்பில்
ஒரே பலகை வாங்கில்
அந் நாட்களிலென்றால் அவள்
இந்தளவு அழகில்லை'

பிறகு அம்மா
பார்ப்பது தனது கைகளை
உடைந்த நகங்களை
காய்கறிகள் நறுக்குகையில்
வெட்டுப்பட்ட பெருவிரலை

அத்தோடு அவள் எங்களைப் பார்ப்பாள்
எனது முகத்தை, தம்பியின் முகத்தை
கண்களைச் சிறிதாக்கிப் புன்னகைப்பாள்
அவளது வதனத்தின் சுருக்கங்களையும் சிறிதாக்கி

மூலம் - இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# காற்றுவெளி இலக்கிய இதழ்
# உயிர்மை
# திண்ணை

Tuesday, May 17, 2011

அரசியல்


கீதங்கள் இசைத்து
கிரிக்கட் விளையாடி
வெள்ளித் திரையில்
சின்னத் திரையில்
மேடைகளில் நடித்து
கொலை செய்து
கொள்ளையடித்து
தாதாவாகி மிரட்டி
அதுவும் முடியாதெனில்
குறைந்த பட்சம்
பாலியல் வன்முறையொன்றையாவது
பிரயோகித்து
பெயரை உருவாக்கிக் கொண்டு
உருவத்தை அலங்கரித்து
உடலைச் சமைத்து
அப் பெயரை விற்று
தேர்தலில் வென்று
அமைச்சரவையில்
ஆசனமொன்றையும் பெற்றுக் கொள்ளும்
சோறுண்ணும் எருமைகள்
அநேகமுள்ள நாட்டில்
புல்லுண்ணும் எருமைகள் வாழ்க !!!

- பியன்காரகே பந்துல ஜயவீர (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# உயிர்மை
# கீற்று

Sunday, January 16, 2011

பேரரசன் பார்த்திருக்கிறான்


முன்போர் நாளில்
தீப்பற்றி எரிந்ததாம் நகரொன்று
யாரோ பெண்ணொருத்தி
நிலத்தில் ஓங்கியடித்த சிலம்பொன்றினால்

அரசனின் குற்றமொன்று
தவறொன்று
வஞ்சகமொன்று
காரணம் எதுவாயினும்
எரிந்ததாம் முழு நகரமும்

பேரரசன்
பார்த்திருக்கிறான்

அதோ..அதோ
குற்றம்
தவறு
அத்தோடு
தவறிழைத்தல்
எல்லா இடங்களிலும்

கவனமாயிருங்கள் கவனமாயிருங்கள்

யாரேனும்
இனித் தாங்கவே முடியாத கட்டத்தில்
திரும்பவும்
நிலத்திலடிக்கக் கூடும் சிலம்பொன்றினை

மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# மறுபாதி மொழிபெயர்ப்பு சிறப்பிதழ்
# உயிர்மை
# தடாகம்
# பெண்ணியம் 
# திண்ணை

Sunday, December 5, 2010

மரித்தோரின் திருநாளில்...

இன்று உயிர் நீத்தோர் தினம்
என்னை நினைத்து நீ
கதறும் அழுகையின் ஓசையும்
எனக்குக் கேட்டது

நீ அழுததைப் போலவே
வானம் அழுதது
மின்னல் வெட்டி வெட்டி
பூமியை அதிர வைத்து அதிர வைத்து
துயரம் சொன்னது
வெண்முத்துக் குடை பிடித்து
நான் நடந்து போனேன்

நாங்கள் நடந்துபோன சாலையில்
உன் பாதச்சுவடு தேடினேன்
இரயில் நிலையப் பாலத்தின்
ஈரப்பாசி படிந்த
படிக்கட்டுகளின் மேல்

திருவாணைக் கல்லிருக்கும்
ஒற்றையடிப்பாதையில் நடந்துசென்று
நான்...
எனது கல்லறையருகில்
முழந்தாளிட்டேன்
விடையளிக்கும் பூச்செண்டை வைத்தேன்

எனதே எனதான விழிநீர்த் துளி
எனது கல்லறையின் மீதே
வீழ்ந்து சிதறியது
குளிர் மழைத்துளி போல

'ஐயோ அவனிருந்திருந்தால்
இந்த உலகம் முழுதும்
என்னைப் பற்றி
காதலுடன் கவிதை எண்ணங்களை
விதைத்திருப்பான்
தாரகைத் துண்டுகளைப் போல'

நீ அழும் ஓசை
எதிரொலிக்கிறது
விம்மலுடன்

அன்பான மனைவியான
உன் துயரம்
வெகு தொலைவிலிருந்து கேட்கிறது
சோக கீதத்தின் தாளத்துடன்

மூலம் - ஜயந்த களுபஹன
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 

இலங்கை

நன்றி

# காலச்சுவடு இதழ் - 130, அக்டோபர் 2010
# உயிர்மை
# திண்ணை
# ஓவியர் ரவி

Monday, November 15, 2010

பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு...

நானா?

ஓமோம்

இப்பொழுது பத்தாம் வகுப்புக்குத்தான் போகிறேன்
கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்கு

ஐயோ ஓம்
எழுத்துக்களையும் வாசிக்க முடியும்
பாண் தேயிலை சீனி சுற்றித் தரும்
தாள் துண்டுகளை வாசித்தே
நாட்டுநடப்புகளும்
கொஞ்சமேனும் புரிகிறது
உபகாரப் பணம்பெறும் படிவங்கள்
கிராமசேவகர் தாளெல்லாம்
பூரணப்படுத்துவது நான்தான்

ஆங்கிலம்....?

இல்லை ஐயா,

இங்கு ஆசிரியர்கள் இல்லையே
முழுப் பள்ளிக்கூடத்துக்குமே
இருவர்தான் இருக்கிறார்கள்

அரச தேர்வோ?
ஐயோ
அது மிகக் கடினமாம்
ஆசிரியர்கள் இல்லையே

கற்பிக்கவில்லை எங்களுக்கு
விஞ்ஞானம்
கணிதம்
அத்தோடு மொழியையேனும்

சமயமா?

சமயப் பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்திருப்பவை
மட்டுமே தெரியும்

நன்றாகப் படிக்க வேண்டுமா?

ஐயோ இல்லை ஐயா...

வீண் கனவுகளெதற்கு?
எழுதுவினைஞர்
ஆசிரியர்
பதவிகளை வகிக்க
எண்ணிப் பார்க்கவும் முடியாது எம்மால்
குறைந்தது
அட்டெண்டண்ட் வேலையாவது எடுக்கமுடியாது
ஆறு பாடமாவது சித்தியடையாமல்

இந்தக் கொஞ்ச காலத்தையும்
இப்படியே கடத்திக் கொண்டு போய்
*கார்மண்டுக்காவது போக வேண்டும்
காமண்டிலிருந்தென்றால் வெளிநாடுகளுக்கும்
அனுப்புகிறார்களாமே
அப்படியாவது போக முடியுமென்றால்
கொஞ்சமாவது
தலை தூக்க இயலுமாகும்

பொய்க் கனவுகளெதற்கு?

இந்தக் கொஞ்ச காலத்தையும்
இப்படியே கடத்திக் கொண்டு போய்
கார்மண்டுக்காவது போகவேண்டும்

* கார்மண்ட் - ஆடை தயாரிப்பு நிலையம்

மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை



நன்றி
# உயிர்மை
# திண்ணை
# ஊடறு
# தடாகம்

Tuesday, November 2, 2010

காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை


முதியவளான என்னில்
துப்பாக்கிக் கத்தியால் குத்திக் குத்தி
என்ன தேடுகிறாய் பிள்ளையே
வெடிப்புக்கள் கண்டு பால் வரண்ட மார்புகளன்றி
வேறெவை சுருக்கங்கள் விழுந்த என்னிடம்

வெடிக்கக் கூடியவை அனேகம்
பலவீனமான என் நெஞ்சுக்குள் உள்ளன
தென்படாது உன் இதயத்துக்கு அவை
நானும் உன் மத்தியில் இன்னுமொரு தாய்தான்

உன் புன்சிரிப்பைக் காணவென
பாசத்தின் ஈரத்தை நிரப்பி
உனை நோக்கிப் புன்னகைக்கிறேன்
உனது வதனத்திலொரு மாற்றத்தைக் காண இயலாவிடினும்
இச் சீருடையைக் களைந்ததன் பின்னர்
எப்பொழுதேனுமுனக்கு
புன்முறுவல் தோன்றுமென்பது நிச்சயம்

மூலம் - தர்மசிறி பெனடின்
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 

இலங்கை


நன்றி
# காலச்சுவடு இதழ் - 130, அக்டோபர் 2010
# உயிர்மை
# ஊடறு
# திண்ணை
# ரவி (ஓவியம்)

Tuesday, October 26, 2010

நீ மூழ்கி இறந்த இடம்


நீரோடை அணைக்கட்டில் அமர்ந்து
நீ்ரினுள் பாதங்களை அமிழ்த்தியவாறு பார்த்திருந்தேன்
தன்போக்கில் பாய்ந்தோடும் இராட்சத ஓடையை
பிள்ளைப் பருவ நினைவுகளின் நீர்க்குமிழிகள் மிதந்து வந்திட

நீர் வடிந்தோடும் இடத்தில்
பார்வையில் பட்டும் படாமலும்  அலைந்தவாறு
மாலை மயங்கும் ஒளியின் கீதத்தை இசைக்கிறது
பேய்ப் பட்சியொன்று
சொண்டினால் காவி வந்த இரவை
இராட்சத ஓடையின் மருதமரக்கிளைகளிடையே இட்டு
சடசடவெனச் சிறகடித்துப்  பறந்து செல்கிறது

நீரோடைக்கரையில்
மந்தைகளின் வழித்தடம் ஒன்றில்
பல நூறு, ஆயிரம் குளம்புகளின் தேய்ந்து போன தடயங்கள்
அதனிடையே
அக்கரைக்குச் சென்றதேயன்றி
இக்கரைக்கு மீண்டும் வந்ததற்கான அடையாளங்களின்றிய
பிள்ளையொன்றின் பாதச்சுவடுகள்,
பல தசாப்தங்கள் கடந்தனவாய்....

உற்றார் உறவென்று யாருமற்ற
இடையச் சிறுவனொருவன்
இரவுணவாகக் கிடைக்கும் பாதி ரொட்டியையும்
தண்டனையின் நிமித்தம் இழந்தவனாக
தொலைந்து போன மாடொன்றைத் தேடியவாறு
இரவு முழுதும் புதர்கள் தோறும் அலைந்து திரிந்து
உடைந்து போன கரகரத்த குரலெழுப்பி மாடுகளை அழைக்கும் ஓசை
தொலைவில்
ஓடைக்கு அக்கரையிலிருந்து
கேட்டவாறுள்ளது  இன்னும்

மூழ்காமல் இருந்திடத் தனது கை கால்களை அடிக்கும் வேளை
நீர்ப்பரப்பு கொந்தளிக்கும் ஓசை
இக்கரையை அடைந்த யாரோ மூச்சு இரைத்தவாறு
ஈரத் துணியொன்றை உதறிப்போடும் சப்தம்,
சிறுதடியால் புதரொன்றுக்கு அடித்தவாறு
மிக அருகே அடிவைத்து வரும் ஒலி,
பெயரைத் தானும் அறிந்திராத தனது தாய் தந்தையரிடம்
துயரத்தைச் சொல்லி தனியே விம்மும்
அந்தப் பிள்ளையின் அழுகைக் குரல்
எதையுமே கேளாதவாறு தூங்கிய எனது அழகிய ஊர்
அன்று போலவே இன்றும் உறங்குகிறது,
நிலா இரவை மரித்தோருக்கென வைத்துவிட்டு.

பதினாறாம் குறிச்சியின் புளிய மரத்தின் கீழே
கரை மீட்டெடுத்துக் கிடத்தப்பட்டிருந்தது
அந்த அனாதைப் பிள்ளையின் சடலம்.
ஒரு நாளும் நிரம்பியிராத வயிறு,
பெருமூச்சுகள் இறுகிய சுவாசப்பைகள்
இராட்சத ஓடையின் சேற்று நீரால் நிரம்பியிருந்ததால்
மூழ்கிச் செத்ததாகத் தீர்ப்பாயிற்று.

கூடியிருந்த யாவரும்  கலைந்து சென்றதன் பின்னர்,
எஞ்சியிருந்த ஓரிருவர் இணைந்து
வயல்வெளிக்கு அப்பாலுள்ள ஒதுக்குப்புற நிலத்தில் புதைப்பதற்காக
உனது சடலத்தைக் கொண்டு சென்ற வேளை
நானும் பின் தொடர்ந்தேன்
அழுவதற்கு யாருமற்ற இறுதிக்கிரியை ஊர்வலமொன்றில்

பள்ளிகூடம் போய்வரும்  இடைவழியில்
பிஸ்கட்டுகளைக்
காட்டில் சேகரித்து வரும் காய்களுக்கு
கைமாற்றிக் கொண்ட அதே புளிய மரத்தின் கீழே
மந்தைக் கூட்டம் சூழ்ந்திருக்கச்  சிரித்தவாறு கையசைக்கும்
உனது உருவைக் கண்டு
கணப்பொழுது மறந்து...
நின்று பார்க்கையில்
மரக்கிளையொன்றில் இற்றுப் போய்க்கொண்டிருக்கும்
நீ அணிந்திருந்த கந்தல் சட்டை
உனது மரணத்துக்காக ஏற்றப்பட்ட
ஒரேயொரு வெண்கொடியாக நிலைத்திருந்ததைக் கண்டேன்
பல காலம் சென்ற பின்பும்

இராட்சத ஓடை எழுப்பும் இந்த நீரலைகள்
எப்போழுதேனும்
நிலவலையும் இரவொன்றில் நீ
நீர்ப்பரப்பிலிருந்து வெளிப்பட்டு யாரும் காண்பதற்கு முன்பே
மீள மூழ்கிடுகையில் தோன்றுகின்ற கொந்தளிப்போ......
தொலைவிலிருந்து வந்து
பள்ளம் நோக்கி மிதந்து செல்லும்
இந்தச் சேற்று நுரை
இராட்சத ஓடையின் அடிப்பரப்பில்
சேற்றினிடையே ஒளிந்து கொண்டு,
இன்னும் குமிழ்களாயெழுகின்ற
உனது இறுதி மூச்சோ.....

மூலம் - அஜித் சி ஹேரத்
தமிழில் - ஃபஹீமாஜஹான்


நன்றி
# கலைமுகம் 50 ஆவது சிறப்பிதழ்
# உயிர்மை
# ஊடறு
# பெண்ணியம்

Monday, October 11, 2010

இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்

அன்பின் சுந்தரம்,

நிலா நட்சத்திரங்கள் அணைந்துபோன
ஏழை வானத்தின் கீழ்
அந்தகார இரவு
முகாமுக்குச் சுருண்டு கொள்ளும்போது
ஊமை ஓலமிடும் நிலத்தின் கீழே
எந்த இடத்திலாவது நீங்கள் உறங்கியிருப்பீர்களென
உங்களைக் கடந்து போகும் வரும் பூட் சப்பாத்துக்களின் ஒலி
அசைகின்ற உலகைச் சொல்லித் தரும் எனக்கு

அன்றைய நள்ளிரவு இருள்
பஞ்சாயுதங்கள் வீழ்ந்த களப்பு
அப்பா இல்லாமல் போன காலம்
குஞ்சுகளுக்கு யாருடைய காவல்

அங்கிருந்தும் இங்கிருந்தும் கொஞ்சம் பேர்
வந்து அடிக்கடி விசாரிக்கிறார்கள்
ருசி தானே இந்த (சிறை) உணவு
வேறெங்கும் கிடைத்ததா இதை விடவும் சுவை உணவு

புள்ளினங்கள் பறந்தாலும்
பாடல்கள் இல்லை அவையிடத்தே
பூக்கள் மலர்ந்தாலும்
மிதிபட்டுச் சிதையும் அக்கணமே
இழுத்துப் பிடித்த வீணையின் நரம்புகள்
முன்பெழுந்த இன்னிசையை இனியெழுப்பாது

தப்பித்தோடினால் மீளவும்
முட்கம்பிகளில் சிக்கி விட நேரிடும்
விழி உயர்த்திப் பார்த்தால்
மீண்டும் தலைதூக்க முடியாமல் போய்விடும்
ஒரு துளி விழிநீர் சிந்தினால்
முழுப் பரம்பரையும் சாம்பலாகும்

அதனால் உணர்ச்சியற்றிருக்கிறேன்..
எவர்க்கும் கேட்டுவிடாதபடி சுவாசிக்கிறேன்..

நீங்கள் அங்கு உறங்கும் வரை.

இப்படிக்கு,
உங்களுடைய,
ராதா.

மூலம் - மாலதீ கல்பனா எம்ப்ரோஸ் 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 
இலங்கை


நன்றி
# காலச்சுவடு இதழ் 130, ஒக்டோபர் 2010
# உயிர்மை
# பெண்ணியம்
# திண்ணை
# தடாகம்
# தமிழ்முரசு அவுஸ்திரேலியா
# ஓவியர் ரவி

Friday, October 1, 2010

இறுதி மணித்தியாலம்


கிலட்டின் தயாராகிறது
இறுதி உணவுபசாரத்துக்கும்
சூழ்ச்சி செய்யாமல்
தேர்ந்தெடுங்கள்
தேசியவாதிகளும் விடுதலை விரும்பிகளும்
எங்கள் துணிச்சல்மிக்கவர்களைப் பெயரிட்டுள்ளனர்

ராசாக்கள் தந்த சுகம்
மாளிகை அந்தப்புரம்
கை விட்டுப்போகுமென்ற நடுக்கத்தில்
தேசக் காதலர்கள் அழுகிறார்கள்
வெளிப்படையாகவே அவர்கள்
பகல் கொள்ளைக்காரர்கள்
ஊழல்காரர்கள் கொலைகாரர்கள்
சுரண்டிச் சாப்பிடுபவர்கள்

ரோசா நிறத்து விடுதலைவிரும்பிகள்
(சுய இருத்தலுக்கான)
உபாயமொன்றை
மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்
தேர்ந்தெடுத்த அனைத்தும் தவறானவை
பொருட்டின்றிக் கைவிடப்பட்ட
வலுவோடும் அன்போடும்
துயில்கின்றனர் பெருநிலத்தின் கீழே
வடக்கிலும் தெற்கிலும்
பல்லாயிரக் கணக்கில்
தொண்டைகிழிய
இரு கைகளுயர்த்திச் சொல்கிறார்கள்
அவர்களது தந்தையினதும் சகோதரனினதும்
அயலவனினதும் கொலைகாரர்கள்
எமது மீட்பர்கள்தானென

கனவுகளைக் காண்பவனும்
கனவுகளைக் கட்டியெழுப்புபவனும்
எம்முடனேயே மரித்துப்போகட்டுமென விதிக்கப்பட்டுள்ளது
இப்பொழுதே
கண்டங்களின் வேட்டைக்காரர்கள்
துணிச்சல்காரர்களை
விலைக்கு வாங்கிவிட்டனர்

மூலம் - மஹேஷ் முணசிங்ஹ 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 
இலங்கை

நன்றி
# உயிர்நிழல் இதழ் 32, ஏப்ரல் - ஜூன், 2010
# உயிர்மை
# திண்ணை

Wednesday, September 15, 2010

குற்றமிழைத்தவனொருவன்

பேரூந்தில் - ரயிலில்
முட்டிமோதிப் பயணிக்கையில்,
பணப்பையினால்
முச்சக்கரவண்டிக் கூலியைச்
சுமக்க முடியாமல்
போகும் வேளையில்,
'அந்தோ, எங்களிடமும் இருக்குமெனில்
சைக்கிள் அல்லாத
ஏதாவதொரு வாகனம்'
என்றெண்ணி
பணிவுடன் வேண்டுகோள் எழுப்புவாயோ
என் ப்ரியத்துக்குரிய பெண்ணே

"அப்பா....
காரொன்று
ஏன் எமக்கில்லை?"
மகன் வினவுகையில்...
"காரொன்று ஏனில்லையென்றால் மகனே...
புத்தகக் குவியலொன்று எம்மிடம் இருப்பதால்" என
சொல்லிக் கொண்டிருக்கிறேன்

ஒவ்வொரு மாதச் சம்பளத்தின் போதும்
வருடந்தோறும் வருகின்ற
புத்தகக் கண்காட்சிகளில்
சுற்றியலைந்தும்
நூல்களை வாங்கி
அடுக்குகளை நிரப்பி
இரவுகள் முழுதும் உறக்கம் தவிர்த்து
ஒவ்வொரு ஏடாக எடுத்து
ஒவ்வொன்றாக வாசித்து
சுற்றுகிறேன் இச் சிறு தீவு முழுதும்
நூல்களின் துணையுடன் உலகம் முழுதும்

பாதங்களினால் நடந்தோ
அல்லது வாகனமொன்றிலோ
பயணிக்க முடியாத் தொலைவுகளைப்
புத்தகங்களினால் கடக்கிறேன்
ஆனாலும்...
என் ப்ரியத்துக்குரிய பெண்ணே!
இனிய குழந்தைகளே!
நான் அறிவேன்
குற்றமிழைத்தவனொருவன் நானென்பதை !!!

மூலம் - பியன்காரகே பந்துல ஜயவீர
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை



நன்றி
# உயிர்மை
# திண்ணை

Thursday, September 2, 2010

ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும்

முதியோர்
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் - வயதுவந்தோர்
பிணக்குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்

பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
*பிரித் நூலும் கட்டப்பட்டது

'நாட்டைக் காக்கும்' எனக்கு காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து

விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்

ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமை மிக்கது

கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
எனது தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்

கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்து கிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்

நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையேதானா

பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன்

கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமலிருக்கிறேன்

* பிரித் நூல் - பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.

மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
         இலங்கை



நன்றி
# உயிர்நிழல் இதழ் - 32, ஏப்ரல் - ஜூன் 2010
# காலச்சுவடு இதழ் - 130, ஒக்டோபர் 2010
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை

Tuesday, August 17, 2010

ஓர் மடல்

*நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி
இங்கும் இல்லாமலில்லை அம்மா
ஆனாலும் அவற்றை மாற்றி மாற்றி
புதிது புதிதாய்ச் செய்கிறார்கள்

விழாக்களும் இப்பொழுது அதிகமென்பதால்
காட்சிகள் தொடர்ந்தபடி உள்ளன
உறக்கமேயில்லாமல் இரவு முழுதும் ஆடுகிறேன்
காலையில் ஒத்திகைக்கு ஓடுகிறேன்

உடலழகு தொலைந்துவிடுமென்று
இரவுணவையும் தருகிறார்களில்லை
இளம்பெண்கள் பத்துப் பேர் நாம்
அவர்களறியாமல் தேனீர் தயாரித்துக் கொள்கிறோம்

பாடல் ஒளிப்பதிவுகளுக்குப் போனால்
ஆயிரம் ரூபாயளவில் கிடைக்கும்
மேலதிகமாக ஆனாலும்
மூட்டுக்களிலும் முதுகெழும்பிலும் வலியெடுக்கும்

புதிய நடனமொன்றின் மெல்லிய ஆடையில்
கவரப்பட்ட செல்வந்தனொருவன்
பரிசுகள் தந்திட அழைக்கிறான்
நான் முடியாதென்றே மறுத்து வருகிறேன்

விழா நாட்களில் எனக்கு எனது
அம்மா சொன்னவை நினைவில் எழுகின்றன
உண்மைதான் சில விழிகளில்
பெரும் அந்நியத்தைக் காண்கிறேன்

ஒன்பது நாட்களுக்குக் காட்சிகள் தொடர்ந்திருக்க
நேற்றென்னை அந்த வருத்தம் பீடித்தது
ஆனாலும் அதனைக் கவனத்தில் கொள்ளாமல்
வீட்டைப் பற்றி எண்ணி எண்ணியே ஆடினேன்

அம்மாவின் மருந்துகளையும்
அப்பாவின் திதிக்கான பொருட்களையும்
வாங்கத் தேவையான பணத்தை இதோ அம்மா
இந்தக் கடிதத்துடனேயே அனுப்பியிருக்கிறேன்

சிகரங்களேறி உலகையே வென்றெடுத்து
எப்பொழுதேனும் மகள் வருவாளென
வேலிக் கம்பில் கைகளை வைத்தபடி அம்மா
பார்த்திருப்பது எனக்குத் தெரிகிறது

* நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி - கிராமிய ஆடல், பாடல்வகைகள்

பின்குறிப்பு - பெரும்பாலானோர் அறிந்திராத மிகவும் அரிதான அனுபவமொன்று இக்கவிதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நகரத்தின் நாட்டியக் குழுவொன்றில் தனது நடிப்புத் திறனை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் இப் பெண் அவளது அன்னைக்கு அனுப்பும் கடிதப் பிரதியொன்றினூடாக அவளது நிஜ வாழ்வு வெளிப்படுகிறது. தொலைத் தொடர்பு சாதனங்களை அலங்கரித்தவாறு பளிச்சிடும் வாழ்வுகளின் பின்னணியில் புதைந்துள்ள அந்தகாரத்தின் நிஜம் மிகவும் முரண்நகையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 

இலங்கை


நன்றி
# தினகரன் வாரமஞ்சரி (15.08.2010)
# நவீன விருட்சம்
# உயிர்மை
# ஊடறு
# பெண்ணியம்
# கூடு

Sunday, August 1, 2010

திருகோணமலை சந்திரன்

சதுர்ஷன்
ராஜனின் இளைய மகன்
தினந்தோறும் மாலையில்
விழிகளால் வானைத் தொட்டு
நிலவையழைப்பான்
சின்னஞ்சிறு கரங்களை அசைத்தவாறு

..நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா..

அதோ அவ்வேளைதான்
கோணேஸ்வரன் தேவாலய உச்சி நோக்கிக்
கைகூப்பியவாறு
திருகோணமலை வானத்துக்கு
நிலவு எழுந்து வரும்

மார்கழி மாதக் குளிர் நாளொன்றில்
இரவு மறந்து போய்
நிலவை கைவிட்டுச் சென்றிருந்தது வானில்
பனிப்புகாரில் சூரியன் மூடுண்ட வேளையில்
மல்லிகைகள் கண்கலங்கி
மகரந்தங்களை வழியவிட்டு அழுதன

போகுமிடம் தெரியாமல்
சீனத் துறையின் உள்ளே
நங்கூரமிட்ட நிலவு
வெண்பனித் துகள்களை ஒவ்வொன்றாய்ச் சேகரித்தது
திருகோணமலையின் சந்தியொன்றில்
இரத்தத் துளிகளில் தோய்ந்த
மல்லிகையொன்றிலிருந்து சுகந்தம் வீசியது

பட்சிகளின் பூபாளம் கேளாத
திருகோணமலையின்
காலைப் பொழுதொன்றில்
முற்றத்தில் இறங்கிய புதல்வனுக்கு
நிலவின் தனித்துப் போன இரு விழிகள் தெரிந்தன
இளஞ்சூரியனின் கிரணங்களுக்குப் புலப்படாத
மிருதுவான விரல்நுனிகளால் அது
புதல்வனின் தலைமீது சாமரம் வீசியது

அந்த மார்கழி முதல்
பணி முடித்துச் சூரியன் போகும் அந்தியானால்
சின்ன விழியொன்று  வானைத் தொட்டு
நிலவையழைக்கும்
பிஞ்சுக் கரங்களை அசைத்தவாறு

மூலம் - மஞ்சுள வெடிவர்தன (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை


நன்றி
# எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010
# உயிர்மை
# கூடு

Thursday, July 15, 2010

பிறக்காத கவிதை

("வன்னியில் மனிதாபிமான நடவடிக்கையின் போது கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட கர்ப்பிணித்தாயொருவரின் புகைப்படத்தைப் பார்த்ததால்")

கண்களைக் கூட திறக்காத
குருவிக் குஞ்சொன்று
தாயின் கர்ப்பத்துள்ளேயே
சதை வேடர்களுக்கு
இரையானது
வெடித்துத்
துண்டுகள் வேறாகிய
தொப்புள்க் கொடியின் மேலாக
எச்சில்படுத்தப்படாத இறகொன்று
இரத்தம் தோய்ந்து வெளிப்பட்டது

பச்சிளம் உதடுகளில்
கறப்பதற்குத் தளும்பிப் பார்த்திருந்த
முலைக்காம்புகள் ஊடாக
கண்ணீரையொத்த பாற்துளிகள் வழிந்தன
குருதியோடு குருதி கலந்து
தாய்ப்பாலால் நிறமடைந்து
பேசாத பெருநிலமும்
பெருமூச்செறிந்து
விம்மியழுதது கேட்டது

பிள்ளை கனவுகள் கண்டிருக்கும்
பாற்சிரிப்பு முகத்தில் பூத்திருக்கும்.
தாய் கனவுகள் வளர்த்திருப்பாள்
வெள்ளைச் சிரிப்பை மெல்லக் கேட்டிருப்பாள்.
வெறிபிடித்தவர்கள் வந்து
கனவுகளை வெடிக்கச் செய்திருக்கலாம்
தசைத்துண்டுகள் மீது
ஊறிக் கலைந்து சென்றிருக்கலாம்

உன்னைப் பலி கொண்ட காட்டுமிருகங்கள்
கொள்ளையடிக்கிறார்கள்
பிறந்த பூமியை.
மோப்பம் பிடிக்கிறார்கள்
நித்தமும் இரத்தச் சுவை வேட்டைகளை.
பிறந்திருந்தாலும்
வாழ்வொன்று எங்கே இருக்கும்
பறக்கின்ற வானத்தையும்
அவர்கள் எடுத்திருக்க

அழாமலே இருக்கிறேன்.
வன்னி அதிக தூரம் எனக்கு. பொறுத்திருக்கிறேன்.
அசையாத
பச்சிளம் இறகை நோக்கி
கனவொன்றில்
எனது கையினைக் கொண்டுசென்று
விரலைப் பற்றுமோ என
பார்த்திருக்கிறேன்

மூலம்: மஹேஷ் முணசிங்ஹ 2009 03 (சிங்களம்)
தமிழில் : ஃபஹீமாஜஹான்


நன்றி
# உயிர்நிழல் இதழ் 32, ஏப்ரல் - ஜூன், 2010

Thursday, July 1, 2010

மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து

என்னிடம் கூறப்பட்டதைப்போலவே - அதிகாலையில்
மகனின் வாகனத்திலேறி அதிக தொலைவு பயணித்து
நகரமொன்றின் தெருவோர மரநிழலில் வாகனத்தை நிறுத்தியவேளை
மூச்சுத் திணறியபோதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை நான்

நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
நின்றேனிங்கு முன்பொரு இரவில் - அதிசயம்தான்
மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது

உனைப் பெற்றெடுத்த நாள்முதலாய்
இணையற்ற அன்பைப் பொழிந்தவளிடம்
போய்வருகிறேன் என்றேனும் பகராமல் நீ செல்கையில்
உள்ளம் பொங்கி வழிகிறது விழிகளினுடாக

கைக்குள் திணித்துச் சென்ற ஆயிரம் ரூபாய் நோட்டு பெரும் சுமையாகிட
உள்ளத்தின் உறுதியைக் கண்களில் திரட்டுகிறேன்
பதற்றமேதுமின்றி வாகனத்தை ஓட்டிக்கொண்டு
பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்திடுவாய் என் மகனே

மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
        இலங்கை


நன்றி
# சொல்வனம் இதழ் - 27
# உயிர்மை
# நவீன விருட்சம்
# கூடு

Tuesday, June 1, 2010

முடியுமெனில் சுட்டுத் தள்ளு !

     தனக்குச் சொந்தமான சூதாட்டவிடுதியொன்றில், பொறுப்பாளராகவிருக்கும் என்ஸோ (ENZO), 25 மில்லியன் டொலர்களைக் கையாடியிருப்பதாக மாஃபியா தலைவரான கோட்ஃபாதருக்கு தகவல் கிடைத்தது.

    என்ஸோ காதுகேளாத, சற்று வயதான ஒருவர். அதனால் கோட்ஃபாதர், என்ஸோவுடன் கதைக்கச் செல்வது தனது சட்டத்தரணியுடன்தான். அந்தச் சட்டத்தரணிக்கு சைகை பாஷை தெரியும்.

"என்னிடமிருந்து களவாடிய 25 மில்லியன் டொலர்களும் எங்கே?"
என்று என்ஸோவிடம் விசாரிக்கும்படி கோட்ஃபாதர், தனது சட்டத்தரணியிடம் உத்தரவிட்டார். சட்டத்தரணி, சைகை பாஷையை உபயோகித்து அந்தக் கேள்வியை என்ஸோவிடம் கேட்டார்.

'நீங்கள் என்ன கேட்கிறீர்களென்றே எனக்கு விளங்கவில்லை'
என்ஸோ சைகை பாஷையிலேயே பதில் சொன்னார்.

"நாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறோமென்றே அவருக்கு விளங்கவில்லையென்று அவர் சொல்கிறார்"
சட்டத்தரணி, கோட்ஃபாதரிடம் கூறினார்.

    தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுத்த கோட்ஃபாதர், கோபத்தோடு அதனை என்ஸோவின் நெற்றியில் வைத்து,
"திரும்பவும் கேள்" என சட்டத்தரணிக்குக் கட்டளையிட்டார்.

'நீ சொல்லவில்லையென்றால் இவர் உன்னைக் கொன்றுவிடுவார்'
சட்டத்தரணி, என்ஸோவிற்கு சைகையில் சொன்னார்.

'சரி. நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். பணம் எல்லாவற்றையும் கபில நிற பெட்டியொன்றில் போட்டு, எனது மைத்துனன் புரூனோவின் தோட்டத்தின் கிழக்குப்பக்கமாக உள்ள மதிலிலிருந்து இரண்டு அடிகள் தள்ளி, குழி தோண்டி புதைத்திருக்கிறேன்'
என்ஸோ சைகை மொழியில் சட்டத்தரணியிடம் விவரித்தார்.

"என்ன சொல்கிறான் இவன்?"
கோட்ஃபாதர், சட்டத்தரணியிடம் கேட்டார். அதற்கு சட்டத்தரணி இவ்வாறு கூறினார்.

"இவன் சொல்கிறான். முடியுமென்றால் இவனை சுட்டுத் தள்ளட்டுமாம். அவ்வாறு சுடுமளவுக்கு உங்களுக்கு தைரியமில்லையாம்."

மூலம் - சமபிம (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 

                     இலங்கை

நன்றி
# உயிர்மை
# நவீன விருட்சம்


Sunday, May 2, 2010

சுய துரோகம்

நேற்று
நீ நான் காதலில் பின்னிப் பிணையாதிருந்தோம்
காதல் வார்த்தைகளைப் பகராதிருந்தோம்
காதல் கவிதைகளை எழுதாமலிருந்தோம்
காதல் கீதங்களை இசைக்காமலிருந்தோம்
எதிர்கால இனிய கனவுகளைக் காணாதிருந்தோம்

நேற்று
நாங்கள் சந்திக்காதிருந்தோம்
இரு கரங்களையும் கோர்த்துக் கொள்ளாமலிருந்தோம்
காதலுடன் அரவணைத்துக் கொள்ளாமலிருந்தோம்
பெருமூச்சொன்றின் உஷ்ணத்தை
அனுபவிக்காதிருந்தோம்

நேற்று
நான் கண்ட அதே நிலவை
நீ காணாதிருந்தாய்
நான் அனுபவித்த தென்றலின் தழுவலை
நீ அனுபவிக்காதிருந்தாய்

நேற்று
நீயென்று ஒருவர் இருக்கவில்லை
நான் மாத்திரமே இருந்திருக்கக் கூடும்
இன்றும் அவ்வாறே
நான் மாத்திரமே
பாதம் பதிக்க இடமற்ற
வெற்று வெளியொன்றில்
புவியொன்றா பிரபஞ்சமொன்றா
பொருளொன்றா
சக்தியொன்றா
எண்ணமொன்றா
உணர்வொன்றா
இவை ஏதுமற்ற
வெற்று வெளியொன்றில்
வெறுமனே தரித்திருக்கிறேன்

நேற்று
சூரியன் உதித்திடவில்லை
நிலவும் நட்சத்திரங்களும் கூட இருக்கவில்லை
அதுவுமன்றி
நேற்றென்றோர் நாள் கூட இருக்கவில்லை

எல்லாமே வெறுமையாய்...

மூலம் - ஜகத் ஜே.எதிரிசிங்க (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 

இலங்கை

நன்றி
#சொல்வனம் இதழ் - 24
# நவீன விருட்சம்
# கூடு 
# உயிர்மை